உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அதற்கு விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்பட்டுள்ளன.
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், உலக அளவுக்கு தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்கும் நோக்கத்துடனும், தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதற்கென என்.ஐ.ஆர்.எஃப். (தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவன தரவரிசை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த ஆண்டுக்கான (2018) தரவரிசைப் பட்டியல் வெளியிடும் பணிகளை என்.ஐ.ஆர்.எஃப். தொடங்கியுள்ளது. இதற்கு கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் தேதி ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், நாடு முழுவதிலுமிருந்து 3
ஆயிரத்து 900 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் கருத்துகளை என்.ஐ.ஆர்.எஃப். வரவேற்றுள்ளது. இந்தக் கருத்துகளைத் தெரிவிக்க வரும் 26-ஆம் தேதி கடைசி. கருத்துகளை www.nirfindia.com என்ற இணையதளத்தில் மட்டுமே தெரிவிக்க முடியும்.