பரோல் வழங்கக்கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குடும்ப சொத்துப் பிரச்னை தொடர்பாக ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி மனு செய்திருந்தார். ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் கடவுச்சீட்டு சட்டம், தொலைத்தொடர்பு சட்டம் என இரண்டு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி எனக்கு பரோல் வழங்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதை ரத்து செய்து தனக்கு பரோல் வழங்கக்கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நான் 16 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளேன். எனவே கடவுச்சீட்டு சட்டம், தொலைதொடர்பு சட்டம் ஆகியவை என்னைக் கட்டுப்படுத்தாது. எனவே என்னை பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை காவல் துணைத்தலைவர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவருக்கு பரோல் வழங்கினால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அவரை விடுவிப்பது குறித்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாகவே பரோல் வழங்கவில்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.