கோவை மாவட்டம், சூலூர் அருகே பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட குக்கர்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை, ரங்கேகவுண்டன்புதூரைச் சேர்ந்த சங்கர் ராம் மகன் சுரேஷ் படேல். இவர் முதலிபாளையத்தில் தொழிற்சாலை நடத்திவந்தார்.
அங்கு சென்னை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கோவை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில் அத்தொழிற்சாலையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக குக்கர்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குக்கர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கோவை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஜெயகுமார் கூறுகையில், இந்த தொழிற்சாலையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தரமற்ற குக்கர்கள் தயாரிப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளர் சுரேஷ் படேலை கைது செய்துள்ளோம் என்றார். இந்த சோதனையின்போது, திண்டுக்கல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி, உதவி ஆய்வாளர் வாசுகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.