மத்திய அரசு மீது தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார் ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி. தினகரன்.
தஞ்சாவூரில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
ஊழல் இல்லாத ஆட்சி என்று மத்தியில் ஆள்பவர்களும், மாநிலத்தில் ஆள்பவர்களும் கூறி வருகின்றனர். ஆனால், அனைத்து இடங்களிலும் ஊழல் பிரவாகமாக ஓடுகிறது. அதனால்தான், மத்திய அரசு மீது தமிழக மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் அரசாங்கம் இருப்பதாகவே மக்கள் நினைக்கவில்லை.
அமைச்சர் ஜெயக்குமார் பெரியார் மண் என்று கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, இத்தனை நாள் அவருக்கு தெரியவில்லையா? பாஜகவின் ஆலோசனையை கேட்டு அதிமுகவின் பொதுச்செயலாளரையே மாற்ற வேண்டும் என்று பேசியவர் அவர்.
ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்ளும் இவர்கள், ஜெயலலிதா எதிர்த்த ஓஎன்ஜிசி திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்?. பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டும் பணியை தமிழக அரசு மேற்கொள்கிறது என்றார் டிடிவி. தினகரன்.