மாணவர்களுக்கு தன் ஒழுக்கம் மிக அவசியம் என சென்னைப் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் கூறினார்.
சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில், மூன்று வார யோகா நிகழ்ச்சி நிறைவு நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பேசியது:
மாணவர்கள் எந்தக் கல்லூரியில் படிக்கின்றனர், என்ன படிக்கின்றனர் என்பது முக்கியமல்ல. தன் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வாழ்வதையே மாணவர்கள் முதன்மையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். யோகா பயிற்சி இதற்கு வழிவகுக்கும். மன உறுதியுடனும், முழு ஈடுபாட்டுடனும் முயற்சித்தால் இலக்கை அடைந்துவிட முடியும் என்றார் அவர்.
விழாவில், கல்லூரி முதல்வர் ஆர்.பிரபாகரன், இயற்பியல் துறைத் தலைவர் ஜி.பிரபாகரன், பேராசிரியர் அ.கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.