சென்னை: அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் ரஜினி, கமல் இருவருமே ஒரே நேரத்தில் அரசியலில் களம் காண இருக்கின்றனர். இதற்காக இருவருமே தயாராகி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ஆம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்து, தனது அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கவுள்ளார்.
அதேபோல நடிகர் ரஜினிகாந்த் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) கட்சியின் பெயரை அறிவித்து அரசியலுக்கு வர இருப்பதாக அவரது ரசிகர் மன்ற வட்டாரங்களில் பேசப்பட்டது. இதற்காக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே ஆரம்ப கட்டப் பணிகளை துவங்கியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகளை அறிவிப்பதற்கான பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னையில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தனது மக்கள் மன்றத்துக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளைத் தேர்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக வேலூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. அதன் முதல்கட்டமாக திருச்சி அல்லது மதுரையில் மாபெரும் மாநாடு ஒன்று நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.