விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.74 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்: இருவர் கைது
சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.74 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
ரியாத்தில் இருந்து ஷார்ஜா வழியாக சென்னை விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த பயணி, ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஷேக் சாந்தனம் பாஷாவை ( 54) சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர் கொண்டு வந்திருந்த மிக்சிகளின் எடை வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் சந்தேகமடைந்து அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.36.5 லட்சம் மதிப்பில் 1.2 கிலோ எடையில் தங்கக் கட்டிகள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஷேக் சாந்தனம் பாஷாவை கைது செய்தனர்.
இதேப் போன்று ரியாத் நாட்டில் இருந்து பக்ரைன் வந்து பக்ரைனில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை அதிகாலை வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது, ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த ஃபயாஸ் அகமத் ஷேக் நயாப் ( 35) பயணி கொண்டு வந்திருந்த மிக்சிகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதிலும் ரூ.37.5 லட்சம் மதிப்பில் 1.2 கிலோ எடையில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதையடுத்து அவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.