சென்னை: எதிலும் அறம் வேண்டும் என்று விரைவில் கட்சி துவங்கவுள்ள நடிகர் கமலுக்கு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக இராமநாதபுரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை ஆர்.ஏ. புரத்தில் உள்ள அவரது இல்லத்தில், நடிகர் கமல் வெள்ளியன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியாதவது:
86 வயது நிரம்பிய சேஷன் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன். மிக நீண்ட பயணம் ஒன்றைத் துவங்க உள்ளேன். அதற்கு அவரது பழுத்த அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு சில ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தனது உடல்நிலை சரியாக இருந்தால், உங்களது கட்சியில் இணைந்திருப்பேன் என்று தெரிவித்தார். அத்துடன் செய்யும் காரியங்கள் எதிலும் அறம் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.