கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற விவசாயிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி அருகே மேலுகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). இவர் தனது விளைநிலத்தில் 8 கறவை மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இரவு நேரங்களில் மாடுகளைப் பாதுகாக்க தோட்டத்திலே தங்கிவிடுவார்.
ஞாயிற்றுக்கிழமை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, தோட்டத்திலிருந்த மாட்டின் மீது பாய்ந்தது. அப்போது, சிறுத்தையை விரட்ட முயன்ற ராமமூர்த்தியைத் தாக்க முயன்றது. தன்னை பாதுகாத்துக் கொள்ள கையில் வைத்திருந்த அரிவாளால் சிறுத்தையை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த சிறுத்தை நிகழ்விடத்திலே உயிரிழந்தது. காயமடைந்த ராமமூர்த்தி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணை: சம்பவ இடத்தை கிருஷ்ணகிரி வனச் சரகர் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உயிரிழந்த 3 வயதான சிறுத்தை யை வனத் துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஏ.பிரகாஷ் பிரதே பரிசோதனை செய்தார். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, சிறுத்தையின் உடல் கிருஷ்ணகிரி வனச் சரக அலுவலகத்தில் எரியூட்டப்படுகிறது. இதுதொடர்பாக மகராஜகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விவசாயி ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.