செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டதும் உணர்ச்சிப் பெருக்கால் ஹாசினியின் தந்தை பாபு கதறி அழுதார்.
தனது குழந்தையின் மரணத்துக்கு நியாயம் கிடைத்துவிட்டதாகக் கூறிய ஹாசினியின் தந்தை பாபு, குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை வரவேற்கிறேன் என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், தமது குழந்தை இனி திரும்பி வரப்போவதில்லை. ஆனால், எனது குழந்தைக்கு ஏற்பட்டது போன்று இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த சட்டப் போராட்டத்தை நடத்தினேன். தனது மகள் மரணத்திற்கு நியாயம் கிடைத்ததென நினைக்கிறேன்.
இந்த சட்டப் போராட்டத்தில் எனக்கு துணையாக இருந்தவர்களுக்கும், மாங்காடு காவல்துறைக்கும், ஊடகத்தினருக்கும், வழக்குரைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.