நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் வீடுகட்ட ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டியபோது, ஐம்பொன்னாலான 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
தலைஞாயிறு மருத்துவமனைத் தெரு, அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் விக்னேஷ்வரன் (36). இவர் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு, அதற்காக அஸ்திவாரத்துக்குப் பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, மண்ணுக்குள் புதைந்திருந்த ஐம்பொன்னாலான ராமர், சீதை, லெட்சுமணர், பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி உள்ளிட்ட11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 7 சிலைகள் சுமார் 2 அடி உயரத்திலும், 4 சிலைகள் 1 அடி உயரத்திலும் காணப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த, வேதாரண்யம் வட்டாட்சியர் ஆர். சங்கர் நிகழ்விடத்துக்குச் சென்று, விசாரணை மேற்கொண்டனார். பின்னர், அந்த சிலைகள் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.