இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் காவல் படையிடம் ஒப்படைப்பு
இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் மீன்பிடிக்கச் சென்ற 130-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம், வவுனியா சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 109 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசின் தலைமை வழக்குரைஞர் மூலம் ஊர்க்காவல் துறை, பருத்தித் துறை நீதிமன்றங்களுக்குப் பரிந்துரை கடிதம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து 109 மீனவர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல் படையிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து 109 மீனவர்களும் மதியம் 3 மணியளவில் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படவிருக்கிறார்கள்.