முனைவர் பட்டம் பெறுவதற்கு 2 தங்கக் காசுகள், 2 வெள்ளி டம்ளர்கள் கேட்ட பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியரின் உரையாடல் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) வேகமாக பரவி வருவது பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துறை ஒன்றில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட மாணவர் ஒருவரிடம், அவருக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் தனக்காகவும், வாய்மொழித் தேர்வுக்கு வரும் கண்காணிப்பாளருக்காகவும் தங்கக் காசுகள், வெள்ளி டம்ளர்களை கேட்கும் ஒலிப் பதிவு கட்செவி அஞ்சலில் கடந்த சில நாள்களாக வேகமாகப் பரவி வருகிறது.
அந்த உரையாடலில், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் தனது வழிகாட்டியான பேராசிரியர் ஒருவரிடம், 'நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு 2 தங்கக் காசுகளையும், துறை இயக்குநர், தேர்வுக் கண்காணிப்பாளர்ஆகியோருக்கு 2 வெள்ளி டம்ளர்களையும் தயார் செய்து விட்டேன்' என்று கூறுகிறார்.
அப்போது அவரிடம் பேசும் பேராசிரியர், வாய்மொழித் தேர்வுக்கு மேலும் ஒரு பேராசிரியர் வருவதாகவும் அவருக்கு விலை உயர்ந்த பேனாவை வாங்கிக் கொள்ளும்படியும், அனைவருக்குமான பரிசுகளை ஒரே மாதிரியான நிறத்திலும், ஒரே அளவிலும் இருக்கும் பெட்டியில் வைத்து அவரவரிடம் வழங்மாறும் கூறுகிறார்.
சம்பந்தப்பட்ட மாணவருக்கான வாய்மொழித் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஊழல் வழக்கில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் 3 நிமிடம் 37 நொடிகள் கொண்ட இந்த உரையாடல் ஒலிப்பதிவு, பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.