அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு 7 அடி உயரமுள்ள அவரது வெண்கலச் சிலைத் திறப்பு நிகழச்சி நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையின் திறப்பு விழா ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11.10 மணியளவில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று சிலையை திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதிமுக நாளேடு:
'நமது புரட்சித் தலைவர் அம்மா' என்ற தினசரி நாளிதழையும் முதல்வரும், துணை முதல்வரும் துவக்கி வைத்தனர். ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த தின விழாவை அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.