திருவள்ளூர் அருகே பூண்டியில் கைது செய்யப்பட்ட 3 நக்ஸலைட்டுகள் புதுக்கோட்டையில் தங்கியிருந்த வீட்டில் நக்ஸல் தடுப்பு பிரிவினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில் மடிக்கணினிகள், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் வெற்றி வீரபாண்டியன் என்பவரது வீட்டில் நக்ஸலைட்டுகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக வெற்றி வீரபாண்டியன்(37), அவரது சகோதரர் தசரதன் (36), இவரது மனைவி செண்பகவல்லி (30) ஆகிய 3 பேரையும் கடந்த 10-ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டியில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, நக்ஸலைட் தடுப்புப் படையினர், திருவள்ளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட போலீஸார் வியாழக்கிழமை இரவு புதுகையில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வெற்றி வீரபாண்டியன், தசரதன், செண்பகவல்லி ஆகிய மூன்று பேரையும் பலத்த பாதுகாப்போடு அவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். பின்னர், வீட்டின் உரிமையாளர் ராணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து மடிக்கணினிகள், பென்டிரைவ்கள், ஹார்டு டிஸ்க், துண்டு அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர், அவர்களை புதுகை ஆயுதப்படை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்ற போலீஸார், புதுகையில் யாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதா, இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, வெற்றி வீரபாண்டியன் உள்ளிட்ட 3 பேரையும் மீண்டும் திருவள்ளூர் கொண்டுசெல்ல போலீஸார் அழைத்துவந்தனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் மூவரும் முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.