மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தும் தமிழகம் உரிமைகளை இழந்து வருகிறது
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தும், தமிழகத்தின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இழந்து வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் சார்பில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களில் 90 சதவீதம் பேர் டிடிவி.தினகரனின் தலைமையை ஏற்றுள்ளனர். எம்எல்ஏக்கள் பலர், தினகரனுடன் பேசி வருகிறார்கள். இதன் முதல் அச்சாரம் தான் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருமானவரித் துறை சோதனைக்கு பயந்து மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கின்றனர். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தமிழகத்துக்கான நலத்திட்டங்கள், நிதிகள் கிடைக்கும் என அமைச்சர்கள் சொல்லி வந்தனர். இதுவரை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தும், தமிழகத்தின் உரிமையை இழந்திருக்கிறார்கள். கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி பிரச்னை போன்றவற்றில் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வரும். ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் செந்தில் பாலாஜி.