ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க நடவடிக்கை
அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை மாற்றியமைக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவரது சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சனிக்கிழமை திறந்து வைத்தனர். இந்தச் சிலை ஜெயலலிதாவைப் போல் இல்லை என்று சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கருத்துகள் எழுந்துள்ளன. எந்தக் கருத்துகள் வந்தாலும், அவற்றை உள்வாங்கி நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.