ஊழல் குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், உடற்கல்வி இயக்குநருமான அமுல்தாஸ் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து காட்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சேர்க்காட்டில் உள்ளது. இதன் கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றிவர் அ.அமுல்தாஸ். இவர், பல்கலைக்கழகத்தின் பொறுப்புப் பதிவாளராகவும் சில ஆண்டுகள் பதவி வகித்து வந்தார். அப்போது, பல்கலைக்கழகத்தின் நிதியை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமுல்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவர் மீது கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அமுல்தாஸ் முன்ஜாமீன் பெற்றிருந்தார்.
இந்நிலையில், காட்பாடி அருகே காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் அமுல்தாஸ் தனியாக இருந்துள்ளார். மாலையில் அவரது கார் ஓட்டுநர் வீட்டின் கதவை தட்டிய போது, நீண்டநேரமாக திறக்கப்படவில்லையாம்.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அமுல்தாஸ் மயங்கிய நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிநவித்தனர்.
தகவலறிந்த காட்பாடி போலீஸார் அமுல்தாஸின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.