சென்னை: விஜய் மல்லையா, நீரவ் மோடி போல் ஓடி ஒளியாத காரணத்தால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின்அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.307 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெற்றுத் தந்தார். இதில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும், அந்த நிறுவனம் கார்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்தது, அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் பெருமளவில் பணம் பெற்றார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேட்டுக்கு உதவியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் புதனன்று சென்னையில் கைது செய்யப்பட்டார். தனது மகளின் மேற்படிப்பு தொடர்பாக லண்டன் சென்றிருந்த அவர், புதனன்று காலை சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இது ஒரு அரசியல பழிவாங்கும் நடவடிக்கையென்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்நிலையில் விஜய் மல்லையா, நீரவ் மோடி போல் ஓடி ஒளியாத காரணத்தால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
லண்டனில் இருந்து திரும்பிய பொழுது விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனென்றால் அவர் திரும்பி இந்தியா வந்துள்ளார். லலித் மோடி, நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டோர் போன்று இந்தியா திரும்பாமல் ஓடி ஒளியவில்லை என்பதுதான். சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்தான்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.