சென்னை: ஹிந்திப் பிரச்சார சபா சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பாட மறந்த மாணவிகளை ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொன்ன சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஹிந்திப் பிரச்சார சபாவில் ஹிந்தி பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி துவங்கியவுடன் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். ஆனால் அங்கிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடுமாறு கூறினார்.
அதைத் தொடர்ந்து மாணவிகள் தமித்தாய் பாடலைப் பாடியுள்ளனர். சமீபத்தில் சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்த்தாய் பாடலுக்குப் பதிலாக, சம்ஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது சர்ச்சையினை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.