சென்னை: அறுபது ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் திராவிட அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அமைந்துள்ளது என்று 'துக்ளக்' இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதிதாக அரசியல் கட்சி துவங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ஞாயிறன்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்களை பல்வேறு தரப்பினரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் 'துக்ளக்' இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் திராவிட அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அமைந்துள்ளது என்று நம்பலாம்.
தமிழகத்திலும் சரி அல்லது அதற்கு வெளியேயும் சரி, 'ஆன்மீக அரசியல்' என்ற ரஜினியின் கருத்தாக்கமானது பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.