சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தின் முன்பு, ஜெயலவிதாவின் தோழி சசிகலா ஆஜராகப் போவதில்லையென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையமானது மருத்துவர் பாலாஜி, தீபா உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சசிகலாவின் அண்ணி இளவரசி மகள் கிருஷ்ணபிரியா செவ்வாயன்று ஆணையத்தின் முன்பு ஆஜராகினர். முன்னதாக விசாரணை ஆணையம் சார்பில், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் பொருட்டு சசிகலா விரைவில் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக தற்பொழுது பெங்களூரு சிறையில் மவுன விரதத்தில் இருக்கும் சசிகலாவிடம் கேட்கப்பட்ட பொழுது, ஆஜராகவில்லை என்று எழுதி காண்பித்ததாகத் தெரிகிறது.
எனவே சசிகலா வசம் உள்ள ஆதாரங்களை அவரது சார்பில், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆணையத்தில் ஆஜராகி சமர்பித்து விளக்கமளிப்பார் என்று தெரிகிறது. அவர் அநேகமாக வரும் 8ம் தேதிக்குள் ஆஜராவார் என்று கூறப்படுகிறது.