தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே முன்விரோதத்தில் தந்தை, மகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (45), அப்பகுதியில் டீ கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அழகம்மாள் (40), மகன் அன்புச்செழியன் (11) மற்றும் மகள் அபிராமி (9). செல்வராஜ் புறம்போக்கு இடத்தில் டீ கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்குமாருக்கும் (33), செல்வராஜுக்கும் இடையே, அந்த இடத்தை ஆக்கிரமிப்பதில் பிரச்னை எழுந்துள்ளது. இதில், செல்வராஜ் டீ கடை வைத்து நடத்தி வருவதால், இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரமேஷ்குமார் அவ்வப்போது செல்வராஜுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து செல்வராஜ் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, மாவட்ட ஆட்சியரிடம் செல்வராஜ் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில், செல்வராஜ் செவ்வாய்க்கிழமை தனது மகள் அபிராமியுடன் டீ கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ரமேஷ்குமார் வேகமாக ஓட்டி வந்த கார், டீ கடைக்குள் புகுந்தது. இதில், பலத்த காயமடைந்த செல்வராஜ், அவரது மகள் அபிராமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, ரமேஷ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து கண்டமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான ரமேஷ்குமாரை கைது செய்தனர்.