தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும் என, சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் கூறினார்.
திருவாரூர் அருகேயுள்ள திருமீயச்சூர் அருள்மிகு லலிதாம்பிகை கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு டிடிவி தினகரன் வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது , "தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். உடனடியாக எதுவும் நடந்துவிடாது.
"கடந்த ஓராண்டாக தமிழகத்தில் ஆட்சி சரியில்லை' என ரஜினி கூறுகிறார். முதலில் அவர் எந்த ஆட்சியை குறை கூறுகிறார் என தெளிவாகச் சொல்லட்டும் என்றார் தினகரன்.
மக்கள் பிரச்னைகளை எழுப்புவேன்: இந்த நிலையில், சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
முத்தலாத் தடை மசோதாவை பாஜக கொண்டு வந்திருப்பது ஏற்புடையது இல்லை. மூன்று ஆண்டுகள் சிறை என்று அந்த மசோதாவில் உள்ள விதியைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த மசோதா குறித்து முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் கருத்தை முழுமையாகக் கேட்ட பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை அமைக்க முற்படுவதும் கண்டிக்கத்தக்கது. விரைவில் தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பேன். ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் பிரச்னையை பேரவையில் எழுப்புவேன் என்றார் அவர்.