தாங்கள் பதிவு செய்த ஆவணங்களை பொதுமக்கள் விரைவாக திரும்பப் பெறும் நோக்குடன், பதிவுத் துறையில் புதன்கிழமை (ஜன.3) முதல் சமாதானத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தாங்கள் பதிவு செய்த ஆவணங்களை பொதுமக்கள் விரைவாக திரும்பப் பெறவும், ஆவணங்களில் முடங்கியுள்ள அரசு வருவாயை வசூலிக்கும் நோக்கிலும் சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் புதன்கிழமை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள ஆவணங்களை வழிகாட்டி மதிப்புப்படி செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வைக்கும், ஏற்கெனவே செலுத்தியுள்ள முத்திரைத் தீர்வைக்கும் இடையேயான வேறுபாட்டில் மூன்றில் இரண்டு பங்கை மட்டும் செலுத்தித் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
சந்தை மதிப்பை நிர்ணயம் செய்து அனுப்புவதற்காக பதிவு அலுவலர்களிடம் நிலுவையாக உள்ள ஆவணங்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். வித்தியாச முத்திரைத் தீர்வையைத் தொடர்புடைய சார் பதிவாளர் அலுவலகத்திலேயே செலுத்தலாம். இந்தத் திட்டம் மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.