உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகள் மறுவரையறை குறித்த கருத்துகளைத் தெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்-செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்திலுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வரைவு மறுவரையறை பணிகளில் ஏதேனும் திருத்தங்கள், ஆட்சேபணைகள், கருத்துகள் இருந்தால் அதுகுறித்த விவரங்களை மறுவரையறை ஆணையத்தின் அதிகாரிக்கு ஜனவரி 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
கால அவகாசம் நீட்டிப்பு: கருத்துகளைத் தெரிவிக்க கால அவகாசம் போதுமானது இல்லை என்று அரசியல் கட்சியினரும், பொது மக்களும் கூறினர்.
இதையடுத்து கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 5 மணிக்குள்ளாக தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை அதிகாரிக்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்கலாம்.
அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மறுவரையறை ஆணையத்தால் நடத்தப்படும் மண்டல வாரியான ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஆட்சேபணை அல்லது கருத்துத் தெரிவித்தவர்கள் பரிசீலனையின் போது ஆஜராகி கோரிக்கையை எடுத்துரைக்கலாம் என்று மறுவரையறை ஆணையம் தெரிவித்துள்ளது.