ஜெயலலிதா சிகிச்சை விடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கில் வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விடியோ காட்சிகளை கடந்த 20 ஆம் தேதி வெளியிட்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதுபோல ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் காவல்துறையினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதங்களை முன் வைக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.