நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் உறைபனி காரணமாக ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டால் ஊருக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குன்னூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் சோலூர் மட்டம், கோத்தகிரி, ஜிம்கானா, பெட்டட்டி, வண்டிச் சோலை உள்ளிட்ட பகுதிகளில் உறைபனிப் பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக தேயிலைச் செடிகள் கருகியுள்ளன. வனப் பகுதிகளிலும் உறைபனியால் செடி, கொடிகள் கருகியுள்ளன. வனங்களில் தாவரங்கள் கருகியுள்ளதாலும், விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கிவிட்டது. இதனால், கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர், உணவு தேடி நகரப் பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து, வன அதிகாரிகள் கூறியதாவது:
வெப்பக் காலத்தில் வனவிலங்குகளுக்காக வனப் பகுதி நீரோடைகள் அருகில் உப்புக் கட்டிகள் வைப்பது, நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்புவது வழக்கம். பனிக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வன விலங்குகள் நுழைந்துவிடாமல் கண்காணிக்கும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஊருக்குள் வரும் வன விலங்குகள் தாமாகவே வனத்துக்குள் சென்றுவிடும் என்றனர்.