கலசப்பாக்கம் அருகே பெண் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான தங்கக் காசுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமம், முத்தாலம்மன் நகரைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை (52). இவரது மனைவி வள்ளி (45). இவர், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.
வள்ளி செவ்வாய்க்கிழமை காலை பணிக்குச் சென்றார். ஏழுமலை வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலைக்குச் சென்றார்.
மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறிக் கிடந்ததும், பீரோவில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தங்கக் காசுகளும் திருடப்பட்டு இருந்ததும் தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.