ஈரோடு: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர் போராட்டம் நடந்து வரும் சூழலில், ஈரோடு மாவட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் அரசுப்பேருந்தை ஓட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதர அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வியாழன் மாலை முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர் போராட்டத்தின் தாக்கம் ஈரோடு மாவட்டத்திலும் எதிரொலித்தது. பணிமனைகளில் மிகவும் குறைவான அளவு பேரூந்துகளே இயக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.
அப்பொழுது அந்தியூர் பணிமனையிலிருந்து பவானி வரை செல்லும் பேரூந்துக்காக மக்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதத்தில், அந்தியூர் அதிமுக எம்.எல்.ஏவான ராஜகிருஷ்ணன் பேருந்தினை ஓட்டி வந்தார். இது அங்கு கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
முறைப்படி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவரான அவர், உரிய அதிகாரிகளிடம் அதனைக் காட்டி அனுமதி பெற்ற பின்பே வாகனத்தை இயக்கியுள்ளார். அவரது இந்த சேவை போக்குவரத்து ஊழியர் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.