சென்னை: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணைய தலைவராக இருந்த ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த ஜெயக்கொடி என்பவர் அந்த பதவியியிருந்து மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக மோகன் பியார் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு புதன்கிழமையன்று வெளியானதும் தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி ராமானுஜம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை திசை திருப்பும் முயற்சி இது என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திமுக சட்டப்பிரிவு செயலாளரான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில் ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றபட்டதில் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்துள்ள பாரதி, புதிய ஆணையரான மோகன் பியாரின் நியமனத்தினை ரத்து செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.