'தமிழ்நாடு' பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்: முதல்வர் அறிவிப்பு! 

சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என 1969-இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
'தமிழ்நாடு' பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்: முதல்வர் அறிவிப்பு! 

சென்னை: சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என 1969-இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956, ஜூலையில் கோரிக்கையினைக் தியாகி சங்கரலிங்கனார் முன்வைத்தார்.

பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967-ஆம் ஆண்டு அப்போதைய "சென்னை மாகாணத்திற்கு" 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் 'தமிழ்நாடு' என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.

தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்கள். தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழ் மொழியின் சிறப்பினை ஆவணப்படுத்தி உலகெங்கும் கொண்டு செல்ல, அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அரசு, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி 14-ஆம் நாள், வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் 'தமிழ்நாடு' என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு 'தமிழ்நாடு' பொன் விழா ஆண்டாக  கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில்தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் ஒரு பகுதியாக நம் கண் போன்ற தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும்,அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் இவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்படுவார்கள்.

தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் அரசு கண்ணின் மணி போல தொடர்ந்து காத்து வரும் என்பதை இந்த மாமன்றத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com