புது தில்லி: சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அமலாக்கத்துறையால் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட நாடகம் என்றும், எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனை குறித்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
வழக்கின் அடிப்படையில் இன்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த காவல்நிலையத்திலுமோ, சிபிஐ போன்ற அமைப்பிலுமோ வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது. ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் எங்கள் வீடுகளில் இதுவரை 3 முறை சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறையினர் சோதனைக்கான அனுமதி ஆணையை காண்பித்தனர். இன்று தில்லியில் உள்ள வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை என பல அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் அனைவரும் மரியாதையுடன் நடந்து கொண்டனர். சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் கீழ் அமலாக்கத் துறை சோதனை ஒரு திட்டமிட்ட நாடகம்.
2012-13 கால கட்டத்தில் ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் வாசித்த சில அறிக்கைகள் அடங்கிய காகிதங்களை எடுத்து சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.