தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் எய்ட்ஸ் தொற்றைத் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம், சின்னம் ஆகியவற்றின் தொடக்க விழா, சமத்துவப் பொங்கல் விழா, கிராமிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பொங்கல் விழா, புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
தமிழகத்தில் 2001-02 இல் 1.13 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் நோய் பாதிப்பு, அரசின் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கையால் தற்போது 0.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் எய்ட்ஸ் தொற்றைத் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. 16 மாவட்டங்களில் தாயிடம் இருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று பரவுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 794 நம்பிக்கை மையங்கள், 1,102 சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்ட பரிசோதனை, ஆலோசனை மையங்கள், 151 தனியாருடன் இணைந்து செயல்படும் சிகிச்சை மையங்கள், 55 கூட்டு சிகிச்சை மையங்கள், 149 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.
விழாவில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் செந்தில்ராஜ், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் வே.ராஜாராமன், சுகாதாரத் திட்ட இயக்குநர் பி.உமா மகேஷ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.