பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை சசிகலாவைச் சந்தித்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியது:
சசிகலா இன்னும் மெளன விரதத்தை கடைப்பிடிப்பதால், பல்வேறு தகவல்களை கை அசைவு, காகிதத்தில் எழுதி காண்பித்து விளக்கினார். சட்டப்பேரவை நிகழ்வு, இன்றைய அரசியல் சூழ்நிலைகளைக் கேட்டறிந்தார். உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
போக்குவரத்து தொழில் சங்கங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. உயர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில்தான் போராட்டத்தை போக்குவரத்துத் தொழிலாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். தொழிலாளர் மற்றும் மக்கள் நலன் குறித்து அரசு கவலைப்படவில்லை.
சட்டப்பேரவையில் தனக்கான உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தேவையற்றது. உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் என எந்தத் தேர்தலையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதிகபட்சமாக அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி கவிழும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் தொகுதிகளைக் கண்டறிந்து, எங்களது அணியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதாக வந்துள்ள அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயல். இதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றார்.
சசிகலாவுடனான சந்திப்பின்போது எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்க.தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரங்கசாமி ஆகியோருடன் நடிகை சரஸ்வதியும் உடனிருந்தார். சாத்தூர் சுப்ரமணிக்கு அனுமதி கிடைக்காததால் சிறைக்கு வெளியே காத்திருந்தார்.