ஜெயலலிதா மரணம் சிகிச்சை விவரங்களை ஒப்படைத்தது அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகளும், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவருமான பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பி இருந்தது. 
30 தொகுப்புகள் கொண்ட சிகிச்சை விவரங்கள் சமர்ப்பிப்பு: அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளான கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவருடன் இருந்தவர்கள், அவரைச் சந்திக்க வந்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட தேதி வாரியான விவரங்கள் அடங்கிய 30 தொகுப்புகள் கொண்ட அசல் பிரதிகள் மற்றும் அதன் நகல்களை அப்பல்லோ மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் கொண்ட குழுவினர் விசாரணை ஆணையத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.
சாட்சியங்களின் பட்டியல் கோரி சசிகலா தரப்பில் மனு: சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு சசிகலாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி இருந்தது. இதன்படி, சசிகலாவுக்கு எதிரான சாட்சியங்கள், பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களின் பட்டியலைக் கேட்டும், இதுதொடர்பாக அனைவரிடமும் விசாரணை நடத்திய பின்பு இறுதியாக எங்களது பதில், ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து, ஜனவரி 22-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
அரசு மருத்துவர் சாமிநாதன் ஆஜர்: சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை துறையின் தலைவர் சாமிநாதன் விசாரணை ஆணையத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார். 
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி இதய செயலிழப்பு ஏற்பட்டது.இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனைக்குச் செல்லுமாறு அரசு கேட்டுக் கொண்டதின்பேரில் அங்கு சென்றேன். ஆனால், நான் அங்கு ஜெயலலிதாவைப் பார்க்கவோ, அவருக்கு சிகிச்சை அளிக்கவோ இல்லை' என்றார்.
அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை: இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை (ஜன. 12) வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு விசாரணை ஆணையம் கடந்த 2-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியது. 
இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட தேதி வாரியன விவரங்கள் அடங்கிய 30 தொகுப்புகள் கொண்ட அசல் பிரதிகள் மற்றும் நகல்களை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அதைப் பெற்றுக் கொண்ட ஆணைய அதிகாரிகள், அதற்கான ஒப்புகைச் சீட்டும் வழங்கினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com