ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டி பெண் எம்.எல்.ஏ சத்யா மீது கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தை கஸ்தூரி என்பவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆக்கிரமிருத்திருந்தார். இந்த நிலத்தை பண்ருட்டி நகராட்சித் தலைவராக இருந்த பன்னீர்செல்வமும் அவரது மனைவியும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான சத்யாவும் தங்களது பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றியுள்ளனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், புகாரில் உரிய முகாந்திரம் இருந்தால் பெண் எம்.எல்.ஏ. மற்றும் அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்ய பண்ருட்டி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.