பொங்கல் விழாவைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணிக்க தொடங்கியதையடுத்து, விழுப்புரம் மாவட்ட சுங்கச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை இரவு வாகன நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்களும் சனிக்கிழமையும் விடுமுறை அளித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பலரும் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமையே செல்லத் தொடங்கினர்.
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கும்சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, பொதுமக்கள் அதிகளவில் அரசுப் பேருந்துகளில் பயணித்தனர்.
அதேபோன்று தனியார் சொகுசுப் பேருந்துகள், கார்களிலும் தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இதனால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓங்கூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மாலை 5 மணி முதலே வாகன நெரிசல் காணப்பட்டது. சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் சுங்கச் சாவடியை விரைந்து கடந்து செல்ல கூடுதல் கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டன. கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நெரிசல் ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டது.
இருப்பினும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் வாகன நெரில் ஏற்பட்டது. நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.