புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவின் போது, முதல்வர் வே.நாராயணசாமியின் தங்கப் பேனா திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் மாநில அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை தொடக்கி வைத்தார். உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட கோவிந்தசாமி சாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதல்வருக்கு பல்வேறு நிர்வாகிகள், அதிகாரிகள் சால்வை அணிவித்தனர். அப்போது, திடீரென தனது சட்டைப்பையில் வைத்திருந்த தங்கப் பேனாவை முதல்வர் நாராயணசாமி பார்த்தபோது, அதைக் காணவில்லை.
இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருக்கு அணிவிக்கப்பட்ட சால்வைகளை அகற்றும்போது பேனா காணாமல் போய் இருக்கலாம் என்று கருதி அதிகாரிகளும், காவலர்களும் தேடிப் பார்த்தனர்.
இதனிடையே நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, பெண் ஒருவர், கீழே கிடந்ததாகக் கூறி தங்கப் பேனாவை கொண்டு வந்து முதல்வரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து பரபரப்பு அடங்கியது.