மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைக்கவுள்ளனர் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அலங்காநல்லூரில் வரும் 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அலங்காநல்லூரில் வரும் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பாகச் செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைக்கவுள்ளனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர் என்றார்.
தீவிர ஆய்வு: பின்னர் அவர் ஜல்லிக்கட்டு வாடி வாசல் மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதிகளைப் பார்வையிட்டார். முக்கியப் பிரமுகர்கள் அமரும் பகுதியில் தாற்காலிக மேடையையும், வெளிநாட்டவர் அமரும் பகுதியையும் அமைச்சர் பார்வையிட்டதுடன், அங்கு மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். காளைகளுக்கான மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் மற்றும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.