காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டது.
இதனை நினைவுகூரும் வகையில் மேட்டூர் அணை பூங்கா நுழைவு வாயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. இந்த நினைவுத்தூணை சனிக்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியது:
சேலம் மாவட்ட வளர்ச்சிக்காக 2010-ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேலம் ஐந்துசாலைப் பகுதியில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தினார். அதன் காரணமாக மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. முன்னாள் முதல்வரின் அறிவிப்பின்படி மேட்டூரில் நினைவுத்தூண் நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு வாரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதில் தமிழகத்துக்குச் சாதகமான நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றார்.
இந்த விழாவில் மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.செம்மலை வரவேற்றுப் பேசினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்களவை உறுப்பினர்கள் வி. பன்னீர் செல்வம், பி.ஆர். சுந்தரம், எம்எல்ஏக்கள் மனோன்மணி, வெற்றிவேல், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.