கோவை - பழனி இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) முதல் சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
போத்தனூர் - பொள்ளாச்சி ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பழனிக்கு ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, கோவை - பழனி இடையே, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வழியாக சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா அறிவித்துள்ளார்.
இந்த ரயில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயங்கும் என்றும், இதில் 7 முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 சரக்கு, பிரேக் வேன்களும் இணைக்கப்பட்டிருக்கும் என்று ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்புப் பயணிகள் ரயில் (06081-06082) ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை - பழனி இடையே தற்போது வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலே (56710-56709) இனி பழனி - கோவை சிறப்பு ரயிலாக 06710 - 06709 என்ற எண்ணில் இயக்கப்பட உள்ளது.
அதாவது, மதுரையில் காலை 7.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், காலை 10.40 மணியளவில் பழனிக்கு வந்தடையும். பின்னர் பழனியில் இருந்து சிறப்புப் பயணிகள் ரயில் எனும் பெயரில் 10.45 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கோவையை வந்தடையும். அதேபோல, மறுமார்க்கத்தில் பகல் 1.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மாலை 4.40 மணிக்கு பழனியைச் சென்றடையும். அங்கிருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு மதுரையைச் சென்றடையும்.