பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சிவகாசியில் வரும் ஜன. 21-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டத்திலுள்ள பட்டாசுத் தொழிற்சாலையை நம்பித்தான் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுநல வழக்கு என்ற பேரில் நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டுள்ளது. பட்டாசு வியாபாரிகள் தொழிற்சாலைகளுக்கு இந்த ஆண்டு முன்பணம் வழங்கவில்லை. இதன் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் தமிழக அரசும் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் ஜன.21-இல் சிவகாசி பாவடி தோப்பு, பத்திரகாளியம்மன் கோயில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.