வேதாரண்யம்: காணும் பொங்கலை முன்னிட்டு நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் செவ்வாயன்று நடந்த நீச்சல் போட்டியில் கடலில் மூழ்கி ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாளான செவ்வாயன்று காணும் பொங்கல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு விதமான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில். மீனவர்கள் வசிக்கும் பகுதியில் செவ்வாயன்று நீச்சல் போட்டி ஒன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சுமார் 20 வாலிபர்கள் படகு ஒன்றில் ஏற்றப்பட்டு கரையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக படகு தடுமாறியதில் அவர்கள் கடலில் மூழ்கினர். இதில் 8 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஐந்து பேர் மரணமடைந்தனர். மேலும் மூவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவமானது அங்கு கடுமையான சோகத்தினை உண்டாகியுள்ளது.