தமிழகத்தின் மூன்று முதல்வர்கள் என்னை அரசியலுக்கு அழைத்தனர் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
பிரசிடென்சி சர்வீஸ் கிளப் சார்பில் தமிழர் திருநாள், விளையாட்டு விழா, பொதுக்குழு என முப்பெரும் விழா மதுரை அரபிந்தோ மீரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா பேசியது:
பிறந்த மண்ணையும், இனத்தையும், தாய் மொழியையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இந்த மண்ணில் பிறந்தவர் என்பதில் பெருமைப்பட வேண்டும். நம்மில் ஒருவருக்கு ஆபத்து என்றால், எங்கோ நடக்கிறது என்று இருந்துவிடக் கூடாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால், எதிர்ப்பு சக்தியை இழந்துவிட்டால் நமது மானம் பறிபோகிவிடும்.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கவிஞர் வைரமுத்து, எங்கிருந்தோ வந்தவர்களால் சிறுமைப்படுத்தப்படுகிறார். உலகத்துக்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர் வைரமுத்து.
அவரது படைப்புகள் காலத்தை வென்றவை. தமிழ் இலக்கியத்தை 8 திசைக்கும் பரப்பியவர். 7 முறை தேசிய விருதைப் பெற்றவர். அவரை மாசுபடுத்துவது மொழியை மாசுபடுத்துவதைப் போன்றது.
தமிழகத்தின் மூன்று முதல்வர்கள் என்னை அரசியலுக்கு அழைத்தனர். நான் ஒரு கலைஞன், கலைஞனராகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று மறுத்துவிட்டேன். இப்போது பின்வாசல் வழியாக தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கின்றனர். அவர்களது கனவு நிறைவேறாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.
தனிப்பட்ட வைரமுத்துவை விமர்சிக்கலாம். ஆனால், அவரது புலமையை, இனத்தை, பெற்ற தாயை விமர்சிப்பதை ஏற்க முடியாது. இதை எதிர்த்துப் போராட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அறைகூவல் வரும், அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
நாம் முன்னெடுக்க உள்ள போராட்டம் தனிமனிதனுக்காக அல்ல, மொழியைக் காக்க, நமது பண்பாட்டைக் காப்பதற்காகத் தான் என்றார்.