புதிய கட்சி தொடங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தனிக் கட்சி தொடங்குவது தொடர்பாக எம்ஜிஆர் பிறந்த நாளில் (ஜன.17) முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று தெரிவித்திருந்தார். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி பொங்கல் விழா கொண்டாடிய அவர் இவ்வாறு கூறினார்.
இதையடுத்து அவர் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைக்கு புதிய கட்சி இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று தினகரன் கோத்தகிரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதிய கட்சி தொடங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை. அதிமுக அம்மா பெயரில் செயல்பட முடியாதபோது வேறுவழியில்லாமல் புதிய கட்சி தொடங்கப்படும். புதிய கட்சி தொடங்கினால் அது அதிமுக, இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.