தனது கட்சியின் பெயரை பிப்ரவரி 21-ஆம் தேதி அறிவித்து, மக்களைச் சந்திக்கும் அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ''என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அந்தக் கடமைகளின் தொடக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்க இருக்கிறேன்.
மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல்...ஆரம்பக்கட்ட சுற்றுப் பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாள்களாக திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.
அரசியல் பயணத்தை..இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ஆம் தேதி என் (கமல்ஹாசன்) கட்சியின் பெயரை அறிவித்து, என் அரசியல் பயணத்தைத் தொடங்க இருக்கிறேன்.
மக்களைச் சந்திப்பது ஏன்? இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று. பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும். பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
பயணத்தின் நோக்கம் என்ன? இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு, குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்'' என்று நடிகர் கமல்ஹாசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.