கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை சிறை பிடித்துச் சென்றனர். மேலும் அவர்களது 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம், மண்டபத்தில் இருந்து திங்கள்கிழமை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த கலையரசன், முனியசாமி, சேதுராமன் என்பவருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சிறை பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் கார்மேகம், பாலா, முனியசாமி, பாண்டியராஜ், ராயப்பன், முத்துக்குமார், ராமர் உள்ளிட்ட 12 மீனவர்களை கைது செய்தனர்.
இதே போன்று மண்டபத்தை சேர்ந்த காளிதாஸ் என்வரது விசைப்படகையும் சிறைபிடித்து படகில் இருந்த ஜெயசீலன், சீனிஇப்ராஹீம்ஷா, பாலகுமார், முனியசாமி ஆகிய நான்கு மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்களை சிறைபிடித்து காங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களது 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை நீதிபதி எம்.எம்.ரியல் ஜன. 29 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 16 மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது வரை இலங்கை சிறையில் 97 தமிழக மீனவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.