இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவனை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் குழு அளித்துள்ளது. அப்பதவியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் வரை சிவன் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் கிரண் குமாரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அப்பொறுப்பினை சிவன் ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவனை மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது ஏற்படும் காலநிலைகளை விண்வெளி ஆராய்ச்சி மூலம் அறிந்து தெரியப்படுத்தவும் மற்றும் வறட்சி காலத்தில் விவசாயத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவிப்புகள் தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.