இடைத் தேர்தலின் போது ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான் என தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரன் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் பேசுகையில், ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான். தினகரன் வெற்றி பெற முக்கிய நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து பேசி இந்த திட்டத்தை வகுத்தோம். அந்த திட்டம் நன்றாகவே பலனளித்துவிட்டது. 20 ரூபாய் டோக்கன் கொடுத்துத்தான் வெற்றி பெற்றோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், டிடிவி தினகரனை வெற்றி பெறச் செய்யத்தான் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் விடியோவை வெளியிடுமாறு வெற்றிவேலிடம் சொன்னதே தினகரன்தான் என்றும் ராஜசேகர் பேசியுள்ளார்.
ஏற்கனவே, ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியிருந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தினகரன் ஆதரவாளர் ராஜசேகரின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.